Wednesday, December 30, 2009

எந்திரன் - சரியா ? தவறா?



Electronic Voting Machine EVM - Human Fear and Error

வாக்குப்பதிவு இயந்திரம்


பெரும் நகரத்தில் மெத்த படித்த 50 வயதைத் தாண்டிய மூத்தவர்களிடம் ஒரு கணினியை இயக்கக் கூறினாலும், ஏன்?! ஒரு சிறிய கையடக்க செல்போனைக் கொடுத்து அதில் உள்ள சில விசயங்களைப் பார்க்க சொன்னாலோ ஒரு பதற்றம் இருக்கும். படித்த இளைய தலைமுறை வெகு சுலபமாக இயக்கும் எலெக்டரானிக் இயந்திரங்களைக் கண்டு இனம் புரியா பதற்றம் அடைவது ஒவ்வொரு வீட்டிலும் காணலாம். இதுவே கிராமபுரத்தில் அதிகம் வாழ்ந்த நன்கு படித்த 50 வயதைத் தாண்டியவர்களிடம் இந்த பதற்றத்தின் அளவு கூடும். இது இப்படி இருக்க அதிகம் படிக்காத கிராம, நகர வாசிகள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் இந்த நாட்டை ஆளப்போகும் நபரைத் தீர்மானிக்கும் வாக்களிக்கும் முறை எலெக்டரானிக் இயந்திரமாக இருப்பது சரியா? தவறா?

நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் சக்தி கட்சி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டது. தேர்தல் ஆணையத்திடம் பதிவுக்கான பணிகள் இன்னும் நிறைவடையாததால் சுயேட்ச்சையாக போட்டியிட்டோம். எங்களுடன் சேர்ந்து மொத்தத்தில் 25 வேட்ப்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பேருக்கு மேல் பதிய முடியாததால் திருச்செந்தூரில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரண்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டது.

வேட்பாளர் வரிசை பொதுவாக, அங்கீகரிக்கப்பட்ட (Recognized Parties) கட்சியின் வேட்ப்பாளர், அதற்கு பின், ஆணையத்திடம் பதியப்பட்ட (Registered Parties) கட்சியின் வேட்ப்பாளர்களின் பெயர், அவர்களின் சின்னம் வரிசையாக இருக்கும். அதற்கு பின் சுயேச்சையாக போட்டியிடும் வேட்ப்பாளர்களின் பெயர்கள் நேரே அவர்களது சின்னத்துடன் ஒரு சிறிய பட்டனுடன் இருக்கும். திருச்செந்தூர் இடைத்தேர்தலில் வேட்ப்பாளர்களின் வரிசை (படத்தில் காண்க) இப்படித்தான் இருந்தது.





இதில் அப்படி வித்தியாசமாக என்ன நடந்தது? எப்படி நடந்தது? எதனால் நடந்தது?

தேர்தல் திருவிழாவில் முக்கிய கட்டம் வாக்குப் பதிவு. பூத் ஏஜென்டுகள் உள் உட்க்கார்ந்தபடியே "இரண்டாவது பட்டன், ஆறாவது பட்டன்" என்று யாருக்கும் கேட்க்காத படி வரும் வாக்காளர்களிடம் கூறுவதும் அதையே கைவிரல்களில் சைகை காண்பிப்பதும் வழக்கம். அதற்கு சற்று முன் வாக்குச்சாவடியிலிருந்து நூறு மீட்டருக்கு வெளியே ஒரு மேசை நாற்காலி போட்டுக்கொண்டு கட்சித் தொண்டர்கள் பூத் ஸ்லிப் (Booth slip வாக்காளர் விபரம்) கொடுத்து வாக்காளர்களிடம் தங்களின் வேட்ப்பாளரின் பெயர், சின்னம் உள்ள எண்ணை சொல்லி அனுப்புவர். உதாரணத்திற்கு திமுக வேட்பாளர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கடைசி நிமிடத்தில் வாக்கு சேகரிப்பவர்கள் அங்கு வரும் வாக்காளரிடம் "உள்ள போனதுமே முதல் முதல் பட்டன். அண்ணே மறந்துடாதீங்க" என்று சொல்லி வாக்கு சேகரிப்பார். அதிமுக கட்சித் தொண்டர்களோ அம்மன் T.நாராயணனுக்கு வாக்கு சேகரிப்பவர்களின் பூத்தை கடந்து செல்லும் வாக்காளரிடம் "அக்கா, இரண்டாவது பட்டன். இரட்டை இலைக்கு தான் உங்க ஒட்டு" என சொல்லி அனுப்புவர்.
ஒரு வேட்பாளர், தொகுதியில் என்ன செய்திருந்தாலும், கட்சி ஒரு சிறந்த கொள்கைகளைக் வைத்திருந்தாலும் இந்த கடைக்கோடி தொண்டர்கள் செய்யும் பணிதான் சில வாக்குகள் அதிகம் பெற்று தரும்.

திருச்செந்தூரில் இறுதியாக வந்த வாக்கு எண்ணிக்கையின் படி திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் 75,223 வாக்குகளும், அதிமுகவின் அம்மன் T.நாராயணன் அவர்கள் 28,362 வாக்குகளும் பெற்றனர். ஆனால் உண்மையிலேயே இவர்களுக்கு வாக்களித்தவர்கள் எத்தனை பேர், இவர்களுக்கு வந்திருக்க வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?

"உள்ளே சென்று முதல் பட்டனை அழுத்துங்கள்" என சொல்லி அனுப்பியிருந்தாலும் பலர் சின்னைத்தை தேடியோ அல்லது வேட்ப்பாளரின் பெயரைத் தேடியோதான் வாக்களிப்பர். ஆனால் சிலர் பதற்றத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டாவது இயந்திரத்தில் முதல் பட்டனை அழுத்தியுள்ளனர். அதாவது உதய சூரியன் சின்னத்திற்கு விழ வேண்டிய 850க்கும் அதிகமான வாக்குகள் திரு பத்மராஜன் அவர்களுக்கு விழுந்துள்ளது. அதிமுகவின் அம்மன் T.நாராயணனுக்கு விழவேண்டிய வாக்குகள்இரண்டாவது இயந்திரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த புஹாரி அவர்களுக்கு விழிந்திருக்க வேண்டும்.

இது முதல் சர்ச்சை என்றால் அடுத்தது இதைவிட வியப்பானது. தொண்டர்கள் வெளியில் சொல்லியனுப்பும் "உள்ள போனதும் முதல் பட்டன், இரண்டாவது பட்டன்" எனும் வார்த்தைகளால் சிலர் பதற்றத்தில் முதல் இயந்திரத்தில் கடைசி இரண்டு பட்டன் (15,16) அதாவது வாக்காளர் நின்று கொண்டிருக்க அவருக்கு அருகில் இருக்கும் முதல் பட்டன் (16 - நூர்முகமதுக்கு திமுக என நினைத்து) வாக்களிப்பவர்களுக்கு அருகில் இருக்கும் இரண்டாவது பட்டன் (15 - டேனியல் அவர்களுக்கு இரட்டை இல்லை என நினைத்து) வாக்களித்துள்ளனர். இரண்டாவது இயந்திரத்தில் கடைசி 7 பட்டன் பெயர் ஏதும் இல்லாததால் இந்த பிரச்சனை அங்கு எழவில்லை.

சர்ச்சைக்குரிய இடங்களாக நாம் கூறும் 15,16,17,18 ஆகிய இடங்களில் உள்ள டேனியல், நூர் முகமது, பத்மராஜன், புஹாரி அவர்கள் பெற்ற வாக்குகள் அனைத்துமே இப்படித் தான் வந்திருக்க வேண்டும் என உறுதியாக கூற முடியாது. அவர்களுக்கென்று தனிப்பட்ட முறையில் சில வாக்குகள் விழுந்திருக்கலாம். இந்த நான்கு பேரை நீக்கிவிட்டு பார்த்தால் சராசரியாக ஒரு சுயேச்சைக்கு 60 வாக்குகள் விழுந்திருக்கிறது. 'எலெக்ட்ரானிக் இயந்திரத்தில் சிலருக்கு இனம் புரியா பதற்றம் இருக்கிறது' என்ற இந்த கருத்தை முன்வைக்க சில ஆணித்தரமான ஆதாரங்கள் உள்ளன.

முதலாவது, 16வது இடத்தில் இருக்கும் திரு. நூர் முகமது அவர்களும் 17வது இடத்தில் இருக்கும் திரு. பத்மராஜன் அவர்களும் சாதனைப் படைக்க, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முறையே 27வது முறையும், 108வது முறையும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதில் பத்மராஜன் அவர்கள் இந்தியாவில் தேர்தல் எங்கு நடந்தாலும் (ஜனாதிபதி தேர்தல் உட்பட) அங்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிடுவார். இந்த செயலுக்கு அவர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் கலெக்டரிடம் மனுதாக்கல் செய்துவிட்டு வீடு சென்றுவிடுவர். டெபாசிட் தொகையை (ரூ.5000) தவிர்த்து ஒரு ரூபாய் கூட செலவிடமாட்டார்கள். தகவல் பெரும் உரிமைச் சட்டம் பயன்படுத்தி யார் வேண்டுமென்றாலும் அவர்கள் செலவிட்ட தொகையை உறுதி செய்துகொள்ளலாம்.

மேலும் இந்த சர்ச்சைக்கு வலுசேர்க்கும் விஷயம், திமுக/அதிமுக வாங்கிய வாக்குகள் முறையே 75,223 / 28,362. அதாவது அதிமுகவை விட 2.65 மடங்கு அதிகம் திமுக பெற்ற மொத்த வாக்குகள்.
இதே போல வாக்கு இயந்திரத்தில் 15வது (186) இடத்தை விட 2.8 மடங்கு அதிகம் 16வது (526)இடம்.
18வது (332) இடத்தை விட2.7 மடங்கு அதிக வாக்கு 16வது(908) இடத்திற்கு.

அதாவது நம் கணக்கின் படி சுமார் 1400 வாக்குகள் அதிகம் பெற்று திமுக மொத்தமாக பெற்றிருக்க வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 77,600 வாக்குகள். அதிமுக பெற்றிருக்குவேண்டிய வாக்குகளின் எண்ணிக்கை 28,800 வாக்குகள். இந்த ஏற்ற இறக்கம் இந்தியாவில் எந்த இடத்தில் எப்படி வேண்டுமானாலும் மாற்றம் பெறலாம்.

ஜனநாயக நாட்டை ஆளப்போவது யார் என்பதை முடிவெடுப்பது அதில் அங்கம் வகிக்கும் மக்கள். அதை நடைமுறைப்படுத்த கையாளப்படும் முறைதான் வாக்கு. அது, தான் நினைத்த நபருக்கு போய் சேரவேண்டும்.
300க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் இன்று தமிழகத்தின் நிதி அமைச்சராக இருக்கிறார்.2500 வாக்குகளுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உள்ளார். ஏன், ஒரு வாக்கு, ஐந்து வாக்குகள் வித்தியாசத்தில் கூட வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் தப்பிவிடுவதும், அப்பாவிகள் தண்டிக்கப்படுவதுமான செயலைப் போல் இதுபோன்ற வழிமுறை சில இடங்களில் ஏற்படக்கூடும். நாம் சரியான நபருக்கு நேர் இருக்கும் பட்டனைத் தான் அழுத்தினோமா என படித்த சிலருக்கே இது போன்ற எலக்ட்ரானிக் பயன்பாடுகள் பதற்றத்தை ஏற்படுத்தும்போது. படிப்பறிவு இன்னும் 60 விழுக்காடு கூட தாண்டாத இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் எது சரியானமுறை என பொதுவில் விவாதம் நடத்தப்படவேண்டும்.

பருகூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு 2000 வாக்குகள் பெற்றது மக்கள் சக்தி கட்சி. EVMல் எங்கள் வேட்ப்பாளருக்கு மேல் இருந்த திமுக வேட்ப்பாளரின் வாக்குகள் 100 அல்லது 200 வாக்குகளை மக்கள் பதற்றத்தில் மக்கள் சக்தி கட்சிக்கு போட்டிருக்கக் கூடுமோ என்ற ஐயம் இப்போது எழாமல் இல்லை.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ' சிவகங்கை தொகுதியில் சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த திரு சிதம்பரத்தை இரண்டு மணிநேரம் கழித்து சில திரைமறைவு வேலைகளுக்குப் பின் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள் ' என்ற குற்றச்சாட்டும் அதற்கு மறுப்பும் ஆங்காங்கே கேட்க முடிகிறது. அதனால் தான், வாக்கு எண்ணிக்கையை வீடியோ கான்பிரன்சிங் (video Conferencing) மூலம் நேரடியாக திரு நரேஷ் குப்தா பார்வையிட்டார் என்றும், ஒவ்வொரு சுற்றின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட பின்பே அடுத்த சுற்று துவங்க வேண்டும் என்ற புது வழிமுறையை திரு நரேஷ் குப்தா பின்பற்றினார் என்றும் கூறப்படுகிறது. திரு சிதம்பரத்தின்(நாட்டின் உள்துறை அமைச்சர்) மீதான குற்றச்சாட்டு உண்மை எனும் பட்சத்தில் அதுவே வாக்கு சீட்டாக இருந்திருந்தால் மக்கள் ஒவ்வொருவரும் கையொப்பமிட்ட வாக்கு சீட்டை மாற்றி அமைக்க தலைமை தேர்தல் ஆணையர் திரு நவீன் சாவ்லா நினைத்தாலும் முடியாத ஒரு செயல்.

இதற்கு என்னதான் தீர்வு?

இந்த வேட்பாளருக்கு இந்த சின்னத்தில் வாக்களித்தீர்கள் என்று அதே இயந்திரத்தில் இருந்து ஒரு ஒப்புதல் சீட்டு (Acknowledgement slip) தரலாம் என்ற வாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனென்றால் வாக்கு என்பது ரகசியம் காக்கப்படவேண்டிய ஒன்று. தேர்தலில் வாக்கு அளிக்கும் முன்பே 1500, 2000 ரூபாய் என பணநாயகம் நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் ஒப்புதல் சீட்டுகொடுத்தால் 5000, 10000 ரூபாய் பணம் என்று மீதமிருக்கும் சனநாயகமும் குழிதோண்டி புதைக்கப்படும்.

இதனால் ஒட்டுமொத்தமாக வாக்கு இயந்திரத்தை ஒழிக்க வேண்டும் என்று கோசம் போடவும் விருப்பமில்லை. 100 விழுக்காடு கல்வியறிவு பெற்ற வளர்ந்த நாடுகள் வாக்குச் சீட்டு முறையிலிருந்து எலெக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்துக்கு மாறி பின் அது சரியில்லை என மறுபடியும் வாக்கு சீட்டு முறைக்கே மாற்றி கொண்டது ஏன்? என்பதை ஆராய வேண்டும். விரைவாக முடிவு தெரிந்துகொள்ளலாம் என்பதற்காக சரியான நபர் தேர்ந்தெடுக்கப்படாமல் போகும் வாய்ப்பும் இதில் உள்ளது என்பதை உணரவேண்டும். இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால் இதைப்பற்றிய விவாதம் பொதுவில் நடத்தப்பட வேண்டும் என்பதே மக்கள் சக்தி கட்சியின்விருப்பம்

Saturday, April 4, 2009

கச்சத்தீவா கன்னித்தீவா...?

கச்சத்தீவு.
ஒரு விதமான இலஞ்சம் என்று கூட சொல்லலாம்.
1974ல் பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. இதைக் கண்டித்து பாகிஸ்தான் அரசு ஐ.நா. அவையில் தாற்காலிக குழு மூலமாக கண்டன தீர்மானம் நிறைவேற்ற முயன்றது. அதை முறியடிக்க இந்தியாவிற்கு இலங்கை உதவியது. அந்த செயலுக்காக கச்சத்தீவு என்னும் பொக்கிஷத்தை இந்தியா, இலங்கைக்கு இலஞ்சமாக கொடுத்தது.

இராமேஸ்வரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், 4 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது கச்சத்தீவு தீவு. ஏற்றுமதி தரம் கொண்ட இறால் மீன்கள், மூலிகை செடிகள், கச்சத்தீவை சுற்றி உள்ள பகுதியில் எண்ணெய் வளம்.... என எதைப் பற்றியும் யோசிக்காமல், அதில் பயனடையும் தமிழக மீனவர்களை கருத்தில் கொள்ளாமல் இச்செயல் நடந்தேறியது.
இன்று எப்படி நாடாளுமன்ற ஒப்புதலின்றி இலங்கை அரசுக்கு இந்தியா, இராணுவ தளவாடங்கள், இராணுவப் பயிற்சி, இராணுவ வீரர்களைக் கொடுத்து உதவுகிறதோ அதே போல 1974லிலும் தன்னிச்சையாக அன்றைய இந்திய பிரதமர் இந்திரா அம்மையார் இந்தியாவின் ஒரு நிலப்பகுதியான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார்.
இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் அன்றும் தி.மு.க., காங்கிரஸ் ஆகியவை கூட்டணிக் கட்சிகள், இன்றும் கூட்டணி கட்சிகள். அன்றும் சரி இன்றும் சரி முதல்வர் கருணாநிதி மௌனமாக தமிழர்களை உயிர்பலி வாங்கும் விதமாக இந்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு துணை நின்றும், மத்திய அரசு பொருட்படுத்தாது என்று தெரிந்ததே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதென்று காலம் கடத்திக்கொண்டுள்ளார்.

விளைவு?.

நூற்றுக்கணக்கில் இந்திய (இராமேஸ்வரம்) மீனவர்களை பலி கொடுத்துள்ளோம்.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும்போது சில ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது, கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதியில் ஏற்றுமதி தரம் வாய்ந்த இறால் மீன்கள் உள்ளதால், இந்திய மீனவர்கள் எவ்வித தடையுமின்றி மீன் பிடிக்கலாம் என்பதுதான் அது. ஆனால் எப்போதும் போல இலங்கை அரசு அந்த ஒப்பந்தத்தையும் கடைபிடிப்பதில்ல்லை.
ஒரு படி மேலே சென்று எந்த நாடும் செய்யத் துணியாததை இலங்கை அரசு இந்திய அரசின் ஒப்புதலோடும், ஒத்துழைப்போடும் செய்துள்ளது. இந்திய - இலங்கை கடல் எல்லையை குறிக்கும் இடத்தில் கன்னி வெடிகளை மிதக்க விட்டுள்ளனர். மீன் பிடிக்க சென்று இரவு பகல் பாராமல் மீன் அதிகமுள்ள பகுதியில் படகை மிதக்கவிடும் மீனவர்கள், தவறுதலாக எல்லைக் கோட்டைத் தொட்டாலே படகு வெடித்து சிதறும்.

விடுதலைப் புலிகள் நடமாட்டம் உள்ளதால் இந்த நடவடிக்கை என கூறுகிறது இந்திய இலங்கை அரசாங்கங்கள். போர்க்கப்பல், நீர்மூழ்கி கப்பலென வளர்ந்துவிட்ட புலிகளை எதிர்க்கிறேன் பேர்வழி என்று மீன் பிடி படகில் பயணிக்கும் இராமேசுவர மீனவர்களை நிர்வானமாக்குவது, சிறையிலடைத்து சித்தரவதை செய்வது, புலிகளின் மீதான கோபம் தலைக்கேறினால் இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வது.... இவை எதுவுமே நாகரீக, பண்பேறிய அரசு செய்யாது. துணையும் போகாது.

அடுத்த நாட்டு மீனவர்களை எல்லை பாதுகாப்பு படை கண்டால், அவர்கள் நாட்டுக்கு கொண்டு சென்று விசாரித்து சிறையிலடைக்கும். பின் சம்மந்தப்பட்ட நாட்டிற்கு தகவல் கொடுக்கும். விசாரணைக்குப் பின் விடுவிப்பர். சுதந்திரத்துக்குப் பின் அரசியல் ரீதியில் இந்தியாவிற்கு எதிரியாக உள்ள பாகிஸ்தான் கூட குஜராத் மீனவர்கள் தவறுதலாக கடல் எல்லையை கடக்கும்போது இன்றுவரை இதைத்தான் செய்கின்றனர்.

ஆனால் இலங்கைக்கு மட்டும் இந்தியா அளித்துள்ள எழுதப்படாத சட்ட விலக்கு என்னவென்றால், எல்லைத் தாண்டும் மீனவர்களைக் கண்டால் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கலாம் என்பது போலத் தான் தெரிகிறது.. இதுவரை 400௦௦ க்கும் மேற்பட்டோர் இலங்கை கடல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துப்பாகிச்சூட்டு காயம்பட்டுள்ளனர். 400ல் ஒரு உயிருக்குக்கூட நாடாளுமன்றத்தில் இரங்கலோ, பாதகத்தைச் செய்த இலங்கைக்கு கண்டனமோ நிறைவேற்றியதில்லை.

இதையெல்லாம் நாடாளுமன்ற கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளோ தேர்தல் அறிக்கைகளில் மட்டும் "கச்சத்தீவை மீட்போம்" என அச்சடித்துவிட்டு, குரங்கு - பூனை - சப்பாத்தி பிரித்துக்கொள்ளும் கதையைப் போல தேர்தலுக்கு சீட்டு பிரித்துக்கொள்வதிலேயே அவர்களுடைய முழு ஆற்றலும் செலவிடுகிறார்கள்.

ஆளும் இந்திய அரசு (தமிழக கட்சிகள் உட்பட) இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறதா? அல்லது இந்தியாவில் வாழும் தமிழர்களையும் சேர்த்து, பொதுவாக தமிழர்களுக்கு எதிராகவே செயல்படுகிறதா? என மக்கள் கேட்க்குமுன் தமிழக மீனவர்களின் உயிரையும் ஒரு உயிராய் மதித்து, கன்னித்தீவாய்த் தொடரும் கச்சத்தீவுக்கு ஒரு விடை காண வேண்டும்.

Wednesday, March 18, 2009

தந்திரமா? துரோகமா?

மக்கள் சக்தி இயக்கத்தின் மாத வெளியீடான "நம்மால் முடியும் " இதழின் மார்ச் மாத வெளியீட்டிலிருந்து ....

இந்தியாவிலேயே ஏன்? உலகத்திலேயே கூடத் தொடர்ந்து போட்டியிட்ட 11 தேர்தலிலும் வெற்றி பெற்ற அரசியல்வாதி நம்முடைய முதலமைச்சர் மு. கருணாநிதியாகத்தான் இருக்கக் கூடும். ஆனால் அவருடைய அரசியல் வாழ்க்கையின் சாதனையாக மாற்றவர்கள் குறிப்பிடுவது, அவரின் தனிப்பட்ட தேர்தல் வெற்றியை விட, அவருடைய அரசியல் ராஜதந்திரத்தைதான்.


அண்ணாவின் மறைவிற்குப்பின், தி.மு.க.வின் மிகப் பெரிய தலைவர்களைப் பின்தள்ளி, எம்.ஜி.ஆர். என்னும் ஏணியை வைத்து, முதல்வரானதில் துவங்கி, எம்.ஜி.ஆர். ஆண்ட 10௦ வருடங்களும், தி.மு.க.வைக் கட்டுக்கோப்பாக வைத்து, பின் ஆட்சிக்கு வந்தது, எந்தவொரு சிறு கட்சியானாலும், அதை பலவீனப்படுத்த அக்கட்ச்சிக்குள்லேயே பிளவு ஏற்ப்படுத்துவது, குறிப்பாக 1996 இல் தேசிய கட்சியான காங்கிரசையே உடைத்து, மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) ஏற்பட வழிசெய்து, உடன் சேர்ந்து அரசியலில் நுழையவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவை மட்டும் பெற்று ஆட்சிக்கு வந்தது, பின்னாளில் தன் மகனின் அரசியல் வாழ்வில் தடையாக இருக்கக் கூடும் எனக் கருதி, வைகோ வை வெளியேற்றியது, அக்கட்சியின் நான்கில் இரண்டு எம்.பி.களை தன் பக்கம் இழுத்தது, மத்தியில் தி.மு.க.விற்கு அதிக அமைச்சர்களைப் பெற்றது, முக்கியத் துறைகளைப் பெற்று மத்தியில் எப்போதுமே ஆளும்கட்சியாகவே இருப்பது........ என சொல்லிக் கொண்டே போகலாம்.


இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகள், தந்திரங்கள் சில சூழல்களில் சுயநல அரசியலாகக் கூடத் தெரியலாம். தமிழ் மக்கள் சில விஷயங்களில் அவருடைய ராஜதந்திரத்தைக் கண்டு பாராட்டியும், சில இடங்களில் ஏசியும் வருகின்றனர். எது எப்படியோ, அவர் ஈழத்தமிழர்களின் இக்கட்டான சமயத்தில் எடுத்துவந்த, எடுத்துவருகிற நிலைப்பாட்டைக் காணப் பொறுக்கவில்லை. அது இக்கட்டான எண்பதுகளில் சரி, இனம் அழியும் விளிம்பின் இச்சமத்திலும் சரி.


இப்போது ஆயுதப் போராட்டம் நடத்தும் போராளிகளை எதிர்க்க அவர் கூறும் மிக முக்கியமான காரணம், 'புலிகள், சகோதரச் சண்டையில் சக தமிழ் இயக்கங்களை, அரவணைக்க மறுத்து அழித்துதான்' என்ற குற்றச்சாட்டு.


சிங்களவர்களுக்கு முன்பே தமிழர்கள் அங்கிருந்தனர் என்பதற்குச் சான்றாக இருந்த ஓலைச்சுவடிகள், ஈழத்தமிழர்களின் இலக்கியங்கள் போன்றவற்றைத் தாங்கி நின்ற யாழ் நூலக எரிப்பில் தொடங்கி, 'தமிழன் கறி இவ்விடத்தில் கிடைக்கும்' என்ற பலகை ஏந்தி நின்ற சிங்களவர்களின் கடைகளைத் தொடர்ந்து, கொதிக்கும் தாரில் குழந்தையை முக்கி எடுக்கும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்த ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் பலர்..... அவர்கள் குழுவாக சேரும்போது, மிக முக்கியமாகக் கருதப்பட்டது ஐந்து குழுக்கள். EPRLF, EROS, PLOT, LTTE, TELO என்பவையே அந்த ஐந்து குழுக்கள். ஒன்றிணைந்து போராட வேண்டியவர்கள் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிந்தது, ஈழத் தமிழர்களின் விடுதலை வரலாற்றில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய பகுதி.


1984ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். முதலைமச்சராக இருந்தபோது, துவக்கத்தில் அதிக அக்கறையில்லாமல் இருந்தாலும், காலப் போக்கில், ஈழத்தில் நடக்கும் கொடுமைகளைக் கேட்டறிந்து, அதைத் தீர்க்க வேண்டும் எனக் கருதி, அப்போதைய பிரதமர் இந்திராவுடன் சேர்ந்து, போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்க வழி செய்தார். அவர்களிடமிருந்த சகோதரச் சண்டையை முடிவிற்கு கொண்டு வர எத்தனித்து, ஐந்து குழுக்களையும் சந்திக்கத் தேதி குறித்து, இராமாவரம் தோட்டத்திற்கு வர அழைப்பு விடுத்திருந்தார். ஒருவேளை, எம்.ஜி.ஆர். தலைமையில் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நிகழ்ந்து, சகோதரச் சண்டை முடிவுற்றிருந்தால், இந்நேரம் ஈழத்தமிழர்களின் போக்கு வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும்.


நாற்பது தொகுதிகளையும் ஓரனிக்கு வழங்கிவிட்டு "கிளஸ்டர் குண்டு மழையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுங்கள்" என்று இன்றைய அரசியல்வாதிகளிடம் மண்டியிட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஊனமுற்றோரில் தொடங்கி, ஜெயில் கைதிகள், திருநங்கைகள் என எல்லோரும் உண்ணவிரதப் போராட்டம் நடத்தியிருக்க வேண்டியதில்லை ; திலீபனும் மடிந்திருக்க வேண்டியதில்லை, முத்துகுமாரும் அவருடைய எழுத்தாற்றலுக்கு ஏற்ற துறையில் முத்திரை பதித்திருக்கக்கூடும்; தமிழருவி மணியனும் காங்கிரசிலிருந்து விலகத் தேவையிருந்திருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய அமைதிப்படை 1987ஆம் ஆண்டு, ஈழத்தில் இருந்த சமயத்தில் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பும் ஏற்ப்பட்டிருக்காது. பாலியல் வன்முறையும் நிகழ்ந்திருக்காது.


ஆனால், முதல்வர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த சமாதானத்திற்கான நிகழ்வு நினைத்தபடி நடக்கவில்லை. தமிழக முதல்வராயிருந்த எம்.ஜி.ஆர். ஒரு தேதி குறித்து, அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் எதிர்கட்சியாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, முதல்வர் குறிப்பிட்ட தேதிக்கு முன் தினமே, அனைவரும் தன்னை வந்து பார்க்கும்படி அறிவிப்பு வெளியிட்டார். இந்த செயலை, அரசியல் ராஜதந்திரம் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால், அதைச் செய்தார். உடன் போராளிக் குழுக்களிடம் குழப்பம் ஏற்பட்டு, யார் அழைப்பை ஏற்று செல்வது என்று புரியாமல் சிதறினர். EPRLF, EROS, TELO ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்தனர். LTTE, PLOTE ஆகிய இரு குழுவினரும் கருணாநிதியின் அழைப்பைத் தவிர்த்து முறைப்படி முதல்வரைச் சந்தித்தனர். முக்கியமாக, சிறி சபாரத்தினம், பத்மநாபா ஆகியோர் கருணாநிதியுடன் நெருக்கமாயினர். பிரபாகரன் முதல்வர் எம்.ஜி.ஆருடன் நெருக்கமானார்.



எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி, ஈழத் தமிழரின் துயர் துடைக்க, அன்றும் நிதி சேகரித்தார். (ஒரு குழுவிற்கு ரூ.50,000 வீதம் ஐந்து குழுவிற்கும் ரூ.2,50,000) அதை வாங்கினால் முதல்வரிடம் நிதி கோர முடியாது எனக் கருதிய பிரபாகரன், கருணாநிதி கொடுத்த ரூ. 50,000ஐ வேண்டாம் எனத் தெரிவித்தார். இதன் பலனாக புனரமைப்புப் பணிகளுக்கும், ஆயுதம் வாங்கவும் எம்.ஜி.ஆரிடம் இருந்து ரூ. 2 கோடியை முதல் தவணையாகப் பெற்றார். புலிகள் இயக்கம் வலுவடைந்தது. சகோதரச் சண்டையில் சபாரத்தினமும், பத்மநாபாவும் புலிகளால் கொல்லப்பட்டனர். அந்த கொலைகளில் உள்ள நியாய, அநியாயங்களைப் பற்றி பேசுவதை இப்போதைக்கு தவிர்ப்போம்.



தி.மு.க. தலைவர் கொடுத்த நிதியை, மற்ற இயக்கங்கள் பெற்றுக் கொண்டது போன்று, பிரபாகரன் பெறவில்லை என்பதாலும், தன்னுடன் நெருக்கத்தில் - ஆதரவிலிருந்த சபாரத்தினம் கொல்லப்பட்டார் என்பதாலும், புலிகள் மீது ஏற்பட்ட கசப்புத் தன்மை, கருணாநிதிக்கு இன்று வரை அகலாமல் இருப்பதை அவருடைய தற்போதைய அறிக்கைகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. சகோதரச் சண்டையை முடித்து வைக்கும் விதமாக அன்றைய முதல்வர், எம்.ஜி.ஆர். எடுத்த முயற்ச்சியை, அரசியல் ராஜதந்திரம் என்ற பெயரில் தடுக்காமல் இருந்திருந்தால் வரலாறு வேறு விதமாக பயணித்திருக்கும். அன்று எதிர் கட்சியாக இருந்து செய்த செயலை, இன்று ஆளுங்கட்ச்சியாக இருந்து செய்து வருகிறார் முதல்வர் கருணாநிதி.


தமிழகத்தில் 1983, 1987 க்கு பிறகான தற்போதைய எழுச்சிக் குரல்கள் பல மாதங்களாகத் தனித்தனியே ஒலித்துக் கொண்டிருந்தன. அவற்றை ஒன்றிணைக்கும் முயற்சியாக, திரு பழ.நெடுமாறன் தலைமையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உருவானது. அப்போதைய காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தாலும், மத்தியில் திருமதி இந்திராவினுடைய ஆதரவு தமிழரின்பால் இருந்ததால், சுதந்திரமாகச் செயல்பட முடிந்தது. ஆனால், இன்றோ மத்தியில் காங்கிரசுடன் தர்மசங்கடமான சூழலில் சிக்குண்டிருக்கும் இச்சமத்தில், நாளொன்றிற்கு நூற்றுக்கணக்கான தமிழர்கள் மடிந்து கொண்டிருக்கும் இந்த இன அழித்தலின் விளிம்பிலும், நியாயமாக 'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை', தலைமையேற்று நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரித்து, இயக்கி இருந்திருக்க வேண்டும்.


ஆனால், ராஜதந்திரம் என்ற பெயரில், இயக்கத்திற்குப் போட்டியாக 'இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை' ஒன்றினை ஆரம்பித்து, மக்களை ஏதோ ஓரிடத்தில் சேர்ந்து போராட விடாமல், குழப்புவது, பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகமே. இயக்கம் மனு கொடுத்தால் இரண்டொரு நாட்களில் பேரவை மனு கொடுப்பது, இயக்கம் மனித சங்கலி நடத்தினால் அடுத்த இரண்டு நாட்களில், பேரவையின் சார்பில் தானும் மனித சங்கிலி நடத்துவது.... இவையெல்லாம் பொது மக்களிடத்தில் உறுதியாக கருணாநிதி அவர்களுக்கு நல்ல பெயர் பெற்றுத் தராது.


இறுதியாக, ஈழ வரலாற்றுப் புத்தகத்தில் நிச்சயமாக கருணாநிதி அவர்களுக்கு ஓர் இடமுண்டு. அது எம்.ஜி.ஆர். இடம்பெற்றிருக்கும் பக்கத்திலா அல்லது கருணா இடம்பெற்றிருக்கும் பக்கத்திலா என்பதைக் காலம் தான் நமக்கு உணர்த்தும்.

- S.D. பிரபாகர்